வியாழன், 25/04/24, 8:10 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

என் இதயம் கேட்பது சொல்லட்டுமா
என் இதயம் கேட்பது சொல்லட்டுமா?

ஒரு தாய்ப்பறவை தன்
குஞ்சுகளுக்களிக்கும் கதகதப்பு.

மழலை பசியுணர்ந்து
மார்பு கொடுக்கும் தாய்மை.

குலுங்கி நான் அழும்போது
குனிந்து என் முதுகு தடவி
ஆறுதல் சொல்லும் தோழமை.

தோல்வி கண்டு நான் துவளுகையில்
இறைவன் துணை சொல்லி
இதயம் தேற்றும் இதம்.

ஒவ்வொரு ஸ்பரிசத்திலும்
உனக்கு நான் இருக்கிறேன் என உணர்த்தும் உறுதி.

கைவிரல் பின்னிக் கொண்டு
காலம் முழுமைக்கும்
காதலி நான் உண்டு என்று
கண்டுகொள்ள வைக்கும் சிநேகம்.

கூடல் வயது குன்றிய பின்னரும்
காதல் என்பது கரையாத ஒன்று என
அன்பு காட்டும் அண்மை.

கோபப்பட்டு நான் கடின வார்த்தை பேசியபோதிலும்
அமைதி காட்டிப் பின் பெரிதுபடுத்தாத பெண்மை.

ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன்
ஆதிக்கம் கலந்த அன்பு.

எங்கேனும் நான் எல்லை மீறினால்
கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.

உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்
உன்னிரு கண் ஈரம்.

இத்தனை கேட்டாலும்
என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான்.

கிடைப்பாயா?

Category: காதல் கவிதைகள் | Added by: (25/07/09) | Author: danoj
Views: 1641 | Rating: 1.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]