சனி, 20/04/24, 1:01 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » மருத்துவம் [ Add new entry ]

அபார்ஷன் என்றால் என்ன?
ஹர்ஷா மனது நொந்து வர இருந்த அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தாள். அவள் கணவன் முகேஷின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தாள். அவரும் குழப்பத்தில் இருந்தார். வழக்கம் போல மூன்றாவது மாத செக்கப்புக்கு வரும்போது, அவர்களுடைய மகப்பேறு மருத்துவர், ஹர்ஷாவின் கருப்பையிலிருக்கும் மூன்று மாதக் கரு 2 மாத வளர்ச்சியைத் தாண்டவில்லை என்று சொன்னதுதான் ஹர்ஷாவும் அவள் கணவரும் கலங்கிக் கொண்டிருந்ததன் காரணம்.

ஹர்ஷாவுக்கு கர்ப்பம் கலைந்து இருந்தது (Missed abortion). ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்து இருக்கின்றது என்ற செய்தி மனதை சோகத்தில் ஆழ்த்தும். அவளுக்கு என்ன பயம் என்றால், அவள்தான் ஏதாவது செய்து அந்தக் கரு கலைவதற்குக் காரணமாகி விட்டாளோ என்று. இந்த காரணமில்லாத பயம் அதிகரிப்பதற்கு உறவினர்களும் நண்பர்களும் சொல்லும் ``வெயிட் தூக்கியிருப்ப... வேகமாக மாடிப்படி ஏறியிருப்ப...'' என்பது போன்ற தவறான குற்றச்சாட்டுகளும் தான்.

ஆனால், இந்த நேரத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அபார்ஷன் என்பது இயற்கையாக நடக்கக்கூடிய விஷயம்தான். இதற்கு நீங்கள் செய்த காரியங்களோ அல்லது செய்யாத காரியங்களோ காரணமாக இருக்க முடியாது. கருத்தரிக்கும் பெண்களில் சுமார் 20 சதவீதம் பேர் தங்கள் கர்ப்பத்தை அபார்ஷனால் இழக்கிறார்கள். அதன் பிறகு, மறுபடியும் நீங்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் எந்தக் காரணமும் இல்லை.

அபார்ஷன் என்றால் என்ன?

அபார்ஷன் என்றால், கருத்தரித்த 5 மாதங்களுக்கு முன்புவரை (20 வாரம்) எப்போது வேண்டுமானாலும் முடிவடைந்து விடக்கூடிய கர்ப்பம் என்பதாகும். மருத்துவ ரீதியாக பார்த்தால், மிஸ்கேரேஜ் (Miscarriage) என்றால் தானாகவே கருச்சிதைவு (Spontaneous abortion) என்று பொருள்.

இது எப்படி ஏற்படுகிறது?

அபார்ஷன் ஏற்படுவதற்கான சரியான காரணத்தைச் சொல்வது மிகவும் கடினம். எப்படியிருந்தாலும் நிறைய அபார்ஷன்களுக்குக் காரணமாக இருக்கும் ஒரு விஷயம் அப்நார்மல் எண்ணிக்கையிலான குரோமோசோம்கள்தான். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இதனால் குழந்தை (கரு என்றும் அழைக்கப்படும்) முழுதாக வளர்ச்சி அடைந்திருக்காது அல்லது ஒழுங்கற்று (abnormal) வளர்ச்சியடைந்து இருக்கும். சில கேஸ்களில் குழந்தை சரியாக வளர்ச்சியடையாததாலேயே அபார்ஷன் ஆகிவிடும். மனக்குழப்பத்தாலோ, அதிக வேலையாலோ, தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டதாலோ கர்ப்பம் கலையாது.

என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?

 சில துளிகளிலிருந்து, அதிகமான ரத்தப் போக்கு வரை ஏற்படுவது.

  • இந்த ரத்தப்போக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லாமலும் ஆரம்பிக்கலாம் அல்லது சிறு கருப்பு நிறத்தில் படலாம்.
  • அடிவயிற்றில் இழுத்துப் பிடித்தாற் போல வலிப்பது...
  • ரத்தப்போக்கோ அல்லது வலியோ இல்லாமல் வஜைனாவில் நீர்ப் போக்கு ஏற்படுவது. இது பனிக்குடம் உடைந்து விட்டதற்கான அர்த்தம்.
  • வஜைனாவில் இருந்து `தசை' போல் வெளியேறும். முடிந்தவரை இதை டாக்டரைப் பார்க்கும்போது பரிசோதனை செய்வதற்கு எடுத்துச் செல்லுங்கள்!

அபார்ஷன் என்று எப்படிச் சொல்வது?

உங்களுடைய டாக்டர் உள்பரிசோதனையின் மூலம், கருப்பையின் அளவை பரிசோதனை செய்வார். அதில் உங்களுடைய கருப்பை சொன்ன தேதியில் இருக்க வேண்டிய அளவை விட சிறியதாக இருந்தால் அபார்ஷன் ஆகலாம் என்று யோசிப்பார். தவிர அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தாலும் அபார்ஷன் ஆனதை கன்ஃபார்ம் செய்து விடலாம்.

அடிக்கடி அபார்ஷன் ஆனால்..

ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து அபார்ஷன் ஆகிக் கொண்டேயிருந்தால் அதன் காரணத்தை கண்டறிய அந்தப் பெண்ணும், பெண்ணின் கணவரும் சில பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

கருப்பையின் வாய் தளர்வாக இருந்தாலும், கருத்தரித்த நான்கு மாதம் கழித்தும் அபார்ஷன் ஆகலாம். இந்த நேரத்தில் கருப்பை வலியில்லாமலேயே திறந்து கொள்ளும். (Incompetent Cervix) இதனால் தொடர்ந்து அபார்ஷனாகிக் கொண்டே இருக்கும். இது குணப்படுத்தக் கூடியதே.

என்ன ட்ரீட்மெண்ட் இருக்கிறது?

த்ரெட்டண்டு அபார்ஷன்

இந்தப் பிரச்னையில் அல்ட்ரா சவுண்ட் மூலமாக கருவிலிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பை பார்க்க முடிந்தால், அந்த கர்ப்பம் தொடர்ந்து வளர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். த்ரெட்டண்டு அபார்ஷனில், வலியில்லாத லேசான ரத்தப்போக்கும் ஏற்படலாம். இதற்கு உங்கள் மகப்பேறு மருத்துவர், ஒன்று (அ) இரண்டு நாட்கள் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லுவார். இப்படிச் செய்தால் ரத்தப்போக்கு நிற்பதுடன் கர்ப்பமும் தொடர்ந்து நன்றாக ஆரம்பிக்கும். இதுபோன்ற சமயங்களில், நீங்கள் ஏற்கெனவே செய்து வந்த உடற்பயிற்சி, நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, தாம்பத்ய உறவையும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை தள்ளி வையுங்கள்.

த்ரெட்டண்ட் அபார்ஷன் என்ற இந்தப் பிரச்னைக்கு பல வருடங்களாக ஹார்மோன் மாத்திரையோ அல்லது இன்ஜெக்ஷனோ தேவையில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்கம்ப்ளீட் அபார்ஷன்
(Incomplete abortion)


ரத்தப்போக்கு ஆரம்பித்து கருவின் சில பாகம் மட்டும் வெளியேறினால் ரத்தப்போக்கு அதிகமாகிவிடும். இதற்கு டி அண்ட் சி மூலமாக கருப்பையின் உள்ளே மீதமிருக்கும் திசுக்களை எடுப்பார்கள்.

மிஸ்டு அபார்ஷன் (Missed Abortion)

இதில் கருப்பையில் இருக்கும் கருவானது, எந்தவித ரத்தப்போக்கும் இல்லாமல் இறந்து போயிருக்கும். இது முதல் சில வாரங்களில் ஆகி இருந்தால் மாத்திரைகள் மூலமாகவே கருப்பையை சுத்தம் செய்யலாம். கரு பெரியதாக இருந்தால் `டி அண்ட் சி' அல்லது பிரசவ வலியை ஏற்படுத்தியோ இறந்த அந்தக் கருவையும், நச்சுக் கொடியையும் அகற்றி விடுவார்கள்.

எந்த கர்ப்பமாக இருந்தாலும் உங்களுடைய ரத்த வகையைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ரத்தவகை Rh நெகட்டிவாக இருந்தால், அதற்கான பாதுகாப்பு ட்ரீட்மெண்ட்டை செய்து அடுத்தடுத்த கர்ப்பங்களில் இதனால் பிரச்னை வராமல் டாக்டர் பார்த்துக் கொள்வார்.

அபார்ஷனுக்குப் பிறகு எவ்வளவு நாட்கள் கழித்து மறுபடியும் கருத்தரிக்க முயற்சி செய்யலாம்?

அபார்ஷனுக்குப் பிறகு, உங்களுடைய மகப்பேறு மருத்துவர் 4 வாரங்கள் வரை தாம்பத்ய உறவு வேண்டாம் என்று அட்வைஸ் செய்யலாம்.
3லிருந்து 6 மாதங்கள் கழித்து அடுத்த கருத்தரிப்பிற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட வேண்டுமென்றால், அதற்கான சரியான கருத்தடை சாதனத்தை உங்கள் டாக்டரே பரிந்துரை செய்யலாம்.

உங்கள் உடல் ரீதியான பிரச்னை ஆறுவது மட்டுமல்லாமல், உங்கள் மனது ஆறுவது மிக முக்கியம். அதன் பிறகு அடுத்த கர்ப்பத்திற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்!

தொகுப்பு: ஆ. சாந்தி

நன்றி
குமுதம்

Category: மருத்துவம் | Added by: tamilan (16/02/10)
Views: 3940 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]